கும்மிடிப்பூண்டி அருகே சஸ்பென்ட் செய்யப்பட்ட தலைமையாசிரியரின் வருகை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சஸ்பென்ட் செய்யப்பட்ட தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட கிராம புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் அறிவியல் ஆய்வகம், மற்றும் கழிவறை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.  இது தொடர்பாகவும் மேலும் மேலும் பல குறைகளை கூறியும் அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்  மற்றும் சமூக ஆர்வலர்கள், தலைமையாசிரியர் சீனிவாசலுவிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் புகார் மனு அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் அடிப்படையில் கடந்த மாதம் தினகரன் நாளிதழில் அறிவியல் ஆய்வகம் மற்றும் கழிப்பறை பற்றி செய்தி வெளியிட்டது. இதன் காரணமாக பொன்னேரி வட்டார கல்வி அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட கல்வி நேர்முக அலுவலர் பிரேம் குமார், பாபு ஆகியோர் பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது மாணவர்கள் கழிப்பிடம் அறைகளை சுத்தம் செய்யாதது தெரிய வந்தது. தலைமை ஆசிரியர் சீனிவாசனைப் பற்றி சக ஆசிரியர்கள் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மேலும் பல குற்றச்சாட்டுகளை கூறினர். இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையாசிரியர் சீனிவாசலுவை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.  இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் சீனிவாசலு நேற்று முன்தினம் ஈகுவார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டார்.  இது அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், சஸ்பென்ட் செய்யப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசலு இந்தப் பள்ளிக்கு வருவதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த பாதிரிவேடு போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மரியில் ஈடுபடும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பேச்சுவார்த்தையில், இந்த பள்ளியில் இவர் இருக்கும் வரையில் மாணவர்களின் வளர்ச்சி முற்றிலுமாக பாதிக்கப்படும். உடனடியாக  இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். இதற்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உறுதி அளித்த பின்னர் கூட்டம் கலைந்து சென்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.