தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஏப்.1, 2, 3-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

30-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் க்ளென்மார்கனில் 2 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.