கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்:  பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதன் காரணமாக கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் உட்பட4 பேர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியும் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கலாஷேத்ரா பவுண்டேஷன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய சுதந்திரமான விசாரணைக் குழுவை கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அமைத்தது.

மேலும், கல்லூரியில் உள் புகார் குழு மீண்டும் அமைக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிதாக மாணவர் ஆலோசகர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவித்தது. மேலும், தேர்வில் பங்கேற்குமாறு மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதன்படி, சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்கியது. இதன் காரணமாக கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.