
விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது, “கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சக்தி நகரில் இயங்கிவரக்கூடிய தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஒன்றில் யூ.கே.ஜி. பயின்று வரும் புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி 11-4-2023 அன்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்ற பின்னர், தனக்கு வயிறு வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்தச் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தச் சிறுமி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அப்பள்ளியின் தாளாளரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர்மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டிருக்கிறேன்.
திமுக நகர் மன்ற உறுப்பினர் என தெரியவந்ததும் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்தியை தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என நான் சொல்ல விரும்பவில்லை. சம்பவத்தை அறிந்தவுடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க சொன்னேன்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோரோ மனித குலத்திற்கு ஒரு அவமான சின்னம் என கருதுகிறோம். குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.