உத்தர பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டம் அயிட் நகரை சேர்ந்தவர் ரோஷ்னி (21). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பிஏ படித்து வந்தார். இந்த நிலையில், ரோஷ்னி கல்லூரியில் நேற்று தேர்வு எழுதியுள்ளார். காலை தேர்வு எழுதிவிட்டு 11 மணியளவில் ரோஷ்னி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
பரபரப்பான சாலையில் ரோஷ்னி நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர் ரோஷ்னியை இடைமறித்தனர். பின்னர், தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ரோஷ்னியை சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில் ரோஷ்னி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரும் அங்கிருந்து பைக்கில் உடனடியாக தப்பிச்சென்றனர். கல்லூரி மாணவி ரோஷ்னி பட்டப்பகலில் நடு ரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையம் அருகே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தேக அடிப்படையில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி ரோஷ்னியை சுட்டுக்கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.