காந்திநகர்: குஜராத்தில் பிரத்யேக இயந்திரம் தயாரித்து தம்பதியினர் தங்கள் தலையை தாங்களே துண்டித்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தை அடுத்த விங்கியா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமுபாய் மக்வானா (38). இவரது மனைவி ஹன்சா பென் (35). இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் மாந்திரீக பூஜைகளில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இவர்கள் வீட்டில் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஹோம குண்டத்தில் நெருப்பை வளர்த்து இந்த தம்பதி பூஜை செய்ததாக தெரிகிறது. இதன் பிறகு மறுநாள் காலையில் இவர்கள் இருவருமே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போதுதான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. ஹோம குண்டத்தை உருவாக்கிய இவர்கள் தலையை துண்டிக்கும் கருவியையும் உருவக்கியுள்ளனர். பின்னர் அந்த இயந்திரத்தில் தங்கள் தலையை வைத்து துண்டித்து கொண்டனர்.
அதிலும் துண்டிக்கப்படும் தலை உருண்டோடி ஹோமகுண்டத்தில் விழும் அளவிற்கு ஏற்பாடுகளை இருவரும் செய்திருந்தனர். மேலும் இவர்களது உடலுக்கு அருகே ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என உறவினர்களுக்கு தம்பதி வேண்டுகோள் விடுத்தனர்.
கில்லட்டின் போன்ற மெக்கானிஸம் கொண்ட அந்த கருவியில் கயிற்றை விட்டவுடன் ஒரு இரும்பு பிளேடு தலையில் விழும். அதில் தலை துண்டாக்கப்பட்டு நெருப்பில் தானாகவே ஓடி போய் விழும் அளவுக்கு செய்திருந்தனர். இருவருமே கடந்த ஆண்டு முதல் இது போன்ற மாந்திரீகத்தை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நரபலி பூஜை குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு புகார் அளித்தனர். இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பகுதியில் இந்த சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இருவரும் நரபலி கொடுத்துக் கொண்டனர். இதன் பின்னணியில் யாராவது மந்திரவாதிகள் இருக்கின்றனவா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.