தூத்துக்குடி – உயிரிழந்த வி.ஏ.ஓ குடும்பத்தினருக்கு எம்.பி. கனிமொழி நேரில் அஞ்சலி.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வழக்கம் போல் இன்று பணிக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், லூர்தை மர்ம நபர்கள் இரண்டு பேர் அவரது அலுவலகத்தில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனால், லூர்து பலத்தைக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அலுவலக ஊழியர்கள் லூர்தை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் தூத்துக்குடியின் எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உயிரிழந்த வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து எம்.பி. கனிமொழி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தரப்படும் என்று உறுதியளித்தார்.