உதயநிதி நடித்த ‘மாமன்னன்’ படம், இம்மாதம் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அந்தப் படத்திற்கு தடை கேட்டும், 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், தனது தயாரிப்பான ‘ஏஞ்சல்’ படத்தை முடித்துக் கொடுப்பதற்காக உதயநிதியிடம் இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் கேட்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் படத் தயாரிப்பாளர் ராம சரவணன். இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..

கார்த்திக் நடித்த ‘தொட்டாசிணுங்கி’, பார்த்திபன் நடித்த ‘சொர்ணமுகி’, மாதவன் நடித்த ‘பிரியசகி’ உள்பட பல படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். அவரது இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் ‘ஏஞ்சல்’. இந்தப் படத்தை தயாரித்திருப்பவர் ராம சரவணன். இதற்கு முன் பரத் நடித்த ‘நேபாளி’, ஷாம் நடித்த ‘ஏபிசிடி’ படங்களை தயாரித்தவர் அவர். இந்த ராம சரவணன் டிரான்ஸ்போர்ட் பிசினஸ் செய்து வருபவர். அவரது தயாரிப்பில் உதயநிதி கடந்த 2018ல் ‘ஏஞ்சல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த ‘ஏஞ்சல்’ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியவர்கள் சிம்பு அல்லது ஜெய் தானாம். அவர்கள் இருவரும் அப்போது ஒழுங்காக படப்பிடிப்புக்கு வரமாட்டார்கள் என்ற பெயர் இருந்ததால், அவர்களை ஒப்பந்தம் செய்தால் நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என்பதால் அவர்கள் இருவரும் வேண்டாம் என சொல்லிவிட்டு, அப்போது நாயகனாக ஃபார்ம் ஆகிக் கொண்டிருந்த உதயநிதியை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

இயக்குநரிடம் படத்தின் கதை முழுவதையும் கேட்ட பின்னரே உதய்யும் இதில் கமிட் ஆகியிருக்கிறார். படத்தின் நாயகன் கமிட் ஆன அடுத்த நாளே படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டார்கள். அதுவும் இங்கல்ல பிஜு தீவில், அந்த சமயம் உதயநிதி கைவசம் நான்கு படங்கள் இருந்தாலும் கூட, அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ‘ஏஞ்சல்’ படப்பிடிப்புக்கு பிஜு கிளம்பிப் போயிருக்கிறார். பிஜு தீவில் படப்பிடிப்பு நடத்தினால் அந்த நாட்டு அரசே, தயாரிப்பாளருக்கு 50 சதவிகிதத் தொகையை மானியமாக அளித்துவிடும் என்பதால், அங்கே தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கிருந்து சென்னை திரும்பிய பின், உதயநிதி தன் கைவசம் உள்ள மீதிப் படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்றார்.
அதன்பிறகு கொரோனா லாக்டவுன் வந்துவிட்டதால், அந்த சமயம் எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை. அதன்பின் 2019ல் தேர்தல் வேலைகள் ஆரம்பித்துவிட்டதால். உதயநிதி தான் நடித்து வந்த படங்களை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு தேர்தல் வேலைகளை கவனிக்கச் சென்றார்.

இன்னும் 8 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் ‘ஏஞ்சல்’ மொத்த படமும் முடிந்துவிடும் என்பதால், தேர்தலுக்குப் பிறகு உதயநிதியிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டுள்ளனர். தயாரிப்பாளர் இதற்காக உதயநிதி பட நிறுவனத்திற்கு நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைதளத்திலுமாக பலமுறை தொடர்பு கொண்டு முயற்சித்தார் என்றும், எதற்குமே உதயநிதி தரப்பில் இருந்து நோ ரெஸ்பான்ஸ் என்றும் சொல்கிறார்கள். இதனால் பிரச்னை வீரியமாகிவிட்டது.இந்நிலையில் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு சேலத்தில் (கடந்த ஆண்டு) நடந்தபோது அங்கு இயக்குநரும், தயாரிப்பாளரும் நேரில் சென்று உதயநிதியை சந்திக்க முயற்சித்திருக்கிறார்கள். ‘உதயநிதியின் ஹேர் டிரெஸ்ஸர் மற்றும் மேக்கப் மேன் இருவருக்கும் சம்பளம் செட்டில் செய்துவிட்டால், அவர் மீதமுள்ள ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவார்’ என தகவல் சொல்லப்பட, அந்த ஸ்பாட்டிலேயே உதயநிதியின் உதவியாளர்கள் இருவருக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் என்கிறார்கள். ஆனாலும், அன்று தயாரிப்பாளரை சந்திப்பதையே உதயநிதி தவிர்த்துவிட்டார் என்கிறார்கள்.

இப்போது உதயநிதி தரப்பிலோ அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது என்கிறார்கள். ஆனால், 8 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் படம் முடிந்துவிடும் என்கிறது தயாரிப்பாளர் தரப்பு. இதுகுறித்து அவர்கள் உதயநிதி தரப்பிடம் முறையிட்டுள்ளனர். படப்பிடிப்பு, சம்பளம் என இதுவரை செலவு செய்த தொகை ரூ.13 கோடி ஆகிறது என்றும் அந்த தொகைக்கு 2018 லிருந்து கணக்கிட்டால் அதற்கான வட்டியும் சேர்த்து ரூ.25 கோடி ஆகிறது. அதனை நஷ்ட ஈடாகக் கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார் தயாரிப்பாளர். அந்த வழக்கு வருகிற 28ம் தேதி விசாரணைக்கு வருமென தெரிகிறது.

40 நாட்களுக்கும் மேலாக நடித்துக் கொடுத்த ஒரு படத்தை உதயநிதி ஏன் தவிர்க்கிறார் என்பதற்கு ஒரு வித்தியாசமான காரணமும் சொல்கிறார்கள். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஆன்மிகம் சார்ந்த சம்பவங்கள் அதிகம் வருகின்றன. இப்போதைய சூழலில் அந்தப் படம் வெளியானால், பா.ஜ.க.வினர் அதை சகட்டுமேனிக்கு கலாய்த்துவிடுவார்கள் என்பதாலேயே உதயநிதி அந்தப் படம் வெளிவருவதை விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.