வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை!

சென்னை உட்பட தமிழகத்தின் பலபகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தது. சென்னையை பொருத்தவரை கடந்த வாரம் முழுக்கவே வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தும் வந்தது. இந்நிலையில் இன்றும் கால முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாக தெரிவித்தது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள செய்தியில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் , புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 29 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.