சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ் தாணு.
பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள தாணு, நேற்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கலைப்புலி எஸ் தாணுவின் பிறந்தநாளை சூர்யா ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்துள்ளனர்.
அதன்மூலம் வாடிவாசல் படம் ட்ராப் ஆகும் என்ற வதந்திகளுக்கும் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சூர்யா ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய தாணு: 1985ம் ஆண்டு முதல் திரைப்பட தயாரிப்பாளராக வலம் வருகிறார் கலைப்புலி எஸ் தாணு. விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கிய தாணு பின்னர் படங்களையும் தயாரிக்கத் தொடங்கினார். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கடைசியாக தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை தயாரிக்க உள்ளார் தாணு. வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள வாடிவாசல், தமிழர்களின் பெருமை பேசும் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் தாணு கூறியிருந்தார். இந்நிலையில், விடுதலை 2ம் பாகத்தில் சில காட்சிகளை ரீ-ஷூட் செய்து வருகிறார் வெற்றிமாறன்.

இதனால், வாடிவாசல் ஷூட்டிங் தாமதமாக தொடங்கும் என சொல்லப்பட்டது. அதேநேரம் வாடிவாசல் ட்ராப் ஆகிவிட்டது, இனிமேல் இந்தப் படம் உருவாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின. மேலும், சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா மீண்டும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விரைவில் அபிஸியலாக அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது.
சுதா கொங்கரா உடன் சூர்யா இணைவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், வாடிவாசல் ட்ராப் ஆகிவிடக் கூடாது என்ற பதற்றத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இதனையறிந்த சூர்யா ரசிகர்கள் தாணுவின் பிறந்தநாளை செம்மையாக கொண்டாடியுள்ளனர்.

‘வாடிவாசல்’ டைட்டில் போஸ்டர் பிரிண்ட் செய்யப்பட்ட கேக் ஆர்டர் செய்து, அதில் தாணுவுக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சூர்யா ரசிகர்களின் இந்த சர்ப்ரைஸ்ஸான பிறந்தநாள் கொண்டாட்டத்தை எதிர்பார்க்காத கலைப்புலி எஸ் தாணு, அவர்களின் அன்பில் திக்குமுக்காடிப் போய்விட்டார். மேலும், வாடிவாசல் ட்ராப் ஆகவில்லை எனவும், கண்டிப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
