அரசுப்பள்ளி மாணவ மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மாணவ மாணவிகள் தரமான கல்வியை பெற நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக அரசு அவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக அரசுப் பள்ளிகளில் காலை சத்தான சிற்றுண்டி மற்றும் மதிய உணவுத்திட்டம் என மேம்படுத்தி வருகிறது. இதில் முட்டை மற்றும் பயறு வகைகளை வழங்கி மாணவ மாணவிகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் மாணவர்களின் உடல் நலன் குறித்து சோதனை செய்யவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்புகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவ மாணவிகளின் உடல் நலன் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் தகவல் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.