அரசியல் போராட்டங்களில் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? – உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், உங்கள் அரசியலுக்காக நீதித்துறையை இழுக்காதீர்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழக அரசை கண்டித்தும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தியது. விழுப்புரத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தியது உள்ளிட்ட விவகாரங்களில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, சில வழக்குகளில் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி, 6 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டதைச் சுட்டிக்காட்டி, 3 வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தை நாடி உரிய நிவாரணம் பெறும்படி அறிவுறுத்தினார். மேலும் ஒரு வழக்கை திரும்பப்பெற அனுமதியளித்தும் உத்தரவிட்டார். மேலும், சி.வி.சண்முகம் தாக்கல் செய்த 2 மனுக்களுக்கு 6 வாரங்களில், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்தியபோது, அவரை சிறையில் அடைத்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்; மிரட்டப்பட்டிருக்கிறார் என சி.வி.சண்முகம் பேசியிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? நீதிபதி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்; மிரட்டப்பட்டிருக்கிறார் என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பியதுடன், உங்கள் அரசியலுக்காக நீதித்துறையை இழுக்காதீர்கள் என அதிருப்தி தெரிவித்தார். நீதிமன்றங்கள் எந்த கட்சி என்றெல்லாம் பார்ப்பதில்லை எனத் தெரிவித்த நீதிபதி, நீதித்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு அரசு தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.