‘‘I.N.D.I.A கூட்டணி வெற்றிபெற்றாலும் நல்லதுதான்” – சொல்கிறார் பூவை.ஜெகன் மூர்த்தி

“பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறீர்களே?!”

“மணிப்பூர் சம்பவம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. அதற்காக, நாங்கள் போராடித்தான் ஆக வேண்டும். நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால்கூட கவலையில்லை. அதேசமயம் உரிமை சார்ந்த பிரச்னைகளைத் தேர்தல் தொடர்புடைய விஷயங்களுடன் ஒப்பிடுவது தவறானது.”

மணிப்பூர்

“மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், யார் பிரதமராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?”

‘‘தமிழகம், புதுச்சேரியைப் பொறுத்தவரை 40 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். மத்தியில் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ… அவர்கள் வெற்றிபெறப் போகிறார்கள். மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமராகப் போகிறார். அவ்வளவுதான்.”

தேசிய ஜனநாயக கூட்டணி Vs I.N.D.I.A

‘‘I.N.D.I.A கூட்டணி குறித்து உங்கள் கருத்தென்ன?”

‘‘I.N.D.I.A கூட்டணியைப் பொருத்தவரை அவர்கள் வெற்றிபெறுவதற்கான எண்ணத்தில் புதிய அணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றிபெற்றாலும் நல்லதுதான்.”

‘‘பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?”

(சிரிக்கிறார்) ‘‘தாராளமாக வாழ்த்துகிறோம்… மக்கள் மன்றத்தில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பதே முக்கியம். I.N.D.I.A கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தாலும் வாழ்த்துகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் தேர்வு செய்தால் அவர்களுக்கும் வாழ்த்துகள்.”

பூவை.ஜெகன் மூர்த்தி

‘‘மணிப்பூர் கலவரம் குறித்துப் பேச மாட்டேன் எனப் பிரதமர் சபதம் எடுத்தார் போல் தெரிகிறதே?”

‘‘மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார், பெண்கள் துன்புறுத்தப்பட்ட வீடியோ தொடர்பாகவும் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். அதேசமயம் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுப்படுத்த வேண்டும்”.

‘‘சமூக நீதி காக்கின்ற இயக்கம் தி.மு.க என்றால் மறுப்பீர்களா?”

‘‘பட்டியல் சமூக மக்களுக்கு சிறப்பு உட்கூறு திட்டம் இருக்கிறது. அதற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறெந்த துறைக்காகவும் எடுக்க மாட்டார்கள். ஆனால் தி.மு.க அரசு, பட்டியல் சமூக மக்களுக்கான நிதியை மடைமாற்றி வேறு விஷயங்களுக்காகச் செலவிடுகிறது. சுமார் 1540 கோடியளவுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியை மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்குச் செலவிட்டிருக்கிறார்கள். 2310 கோடி ரூபாயை பொது விநியோக திட்டத்துக்குச் செலவிட்டிருக்கிறார்கள். இதுதான் தி.மு.க-வின் சமூக நீதியா..?”

‘‘நிதி பங்கீடுகளை வைத்து பட்டியல் சமூகத்துக்கு எதிரான இயக்கம் தி.மு.க எனச் சொல்ல முனைவது நியாயமா?”

‘‘பட்டியல் சமூக மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியை மடைமாற்றச் செய்வது எந்த விதத்தில் நியாயம். தி.மு.க ஆட்சியில் இது ஒன்றும் முதல்முறையல்ல. கருணாநிதி முதல்வராக இருந்தபோது டி.வி கொள்முதலுக்கும் சமத்துவபுரத்துக்கும் செலவு செய்தார். இதனைத் தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையமே சுட்டிக்காட்டியது. அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் இவ்விவகாரத்தைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக் கொண்டனர்.’’

முதல்வர் ஸ்டாலின்

‘‘கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு சீட் கிடைக்கவில்லை… வருகிற 2024 தேர்தலிலாவது சீட் கிடைக்குமா?”

‘‘2019-இல் சீட் கிடைக்கவில்லை என்றில்லை… பொருளாதார சூழல் காரணமாகத் தேர்தலில் நிற்க நாங்களே விரும்பவில்லை. இந்தமுறை போட்டியிடலாமா வேண்டாமா என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுப்போம்!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.