ரஜினி ரசிகர்களுக்கு பிராக்கெட் போட்ட கடம்பூர் ராஜூ… அதிமுக மாநாட்டிற்கு கூட்டத்தை திரட்ட பலே பிளான்!

அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்காக வளையங்குளத்தில் 5 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 300 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் பார்த்து பார்த்து செதுக்கி வருகின்றனர். மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை மதுரை மீனாட்சியம்மன், மதுரையில் உள்ள பள்ளி வாசல்கள், வேளாங்கண்ணி தேவாலயம் ஆகியவற்றிற்கும் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு காலை முதல் இரவு வரை சுடச்சுட அறுசுவை விருந்து அளிக்கும் வகையில் 10 ஆயிரம் சமையல் கலைஞர்களை கொண்டு உணவு தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் அதிமுக மாநாட்டிற்கு மக்களை அழைக்கும் பணியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார். ‘ஜெயிலர்’ பட டிக்கெட்டுகளை ரஜினி ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கி, அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயிலர் படத்தை பொதுமக்களும் ரஜினி ரசிகர்களும் ஆர்வமாக உள்ளதால், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயிலர் பட டிக்கெட்டை முன்பதிவு செய்து அழைப்பு விடுத்துள்ளதாகவும், ரஜினி ரசிகர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ரஜினி ரசிகர்கள் 500 பேருக்கு ஜெயிலர் பட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ஜெயிலர் படத்தின் காலைக் காட்சிக்கான மொத்த டிக்கெட்டையும் முன்பதிவு செய்து அதிமுகவினர் வழங்கி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.