"மாணவர்கள் தற்கொலை வாடிக்கையானது தானே.." மத்திய அமைச்சர் எல். முருகன் கருத்தால் வெடித்த சர்ச்சை!

திருவள்ளூர்:
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றுதான் என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்தால் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு எதிரான குரல்களும் மீண்டும் வலுவடைய தொடங்கி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் பெரிய அளவில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகிறது.

ஆனால், பாஜகவோ நீட் தேர்வுக்கு ஆதரவாகவே இப்போது வரை பேசி வருகிறது. அந்த வகையில், தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய அமைச்சர் எல். முருகனிடம் நீட் தேர்வு தற்கொலை குறித்து நிருபர் ஒருவர் இன்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து எல். முருகன் கூறியதாவது:

மாணவர்கள் தற்கொலையை உடனே நீட் தேர்வுடன் நாம் சம்பந்தப்படுத்திவிட கூடாது. நாம் சிறு வயதில் இருந்தே இதுமாதிரியான செய்திகளை பார்த்திருப்போம். 10-வது தேர்வு முடிவு வரும் போதும், ப்ளஸ் 2 தேர்வு முடிவு அறிவிக்கப்படும் போதும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். மாணவர்கள் தற்கொலை என்பது அந்த காலத்தில் இருந்தே வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.

அந்தந்த மாணவர்களின் சூழ்நிலையை பொறுத்தும், அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்படும் விரக்தியாலும் இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கின்றனர். ஆகவே, மாணவர்கள் தற்கொலையை உடனே அரசியலாக்கக் கூடாது. மாணவர்களுக்கு முறையாக கவுன்சிலிங் கொடுத்து அவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. இவ்வாறு எல். முருகன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.