ஜெருசலேம்,
Live Updates
-
8 Oct 2023 10:12 AM GMT
இஸ்ரேலில் உள்ள சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கியுள்ள இடங்களிலேயே பத்திரமாக இருக்குமாறும் இந்தியர்களுக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரம் அறிவுறுத்தியுள்ளது.
-
8 Oct 2023 9:22 AM GMT
ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் ஆக்கிரமிப்பில் இன்னும் 8 பகுதிகள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசாவில் 426 இடங்களை குறிவைத்து போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அனைத்து பகுதிகளும் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரை ஹமாஸுக்கு எதிரான போர் தொடரும் எனவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
8 Oct 2023 8:16 AM GMT
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸ் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இதில், இளம் பெண்ணை ஹமாஸ் பயங்கரவாதிகள் பைக்கில் கடத்தில் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடத்தப்பட்ட இளம் பெண் இஸ்ரேலை சேர்ந்த நொவா அர்ஹம்னி (வயது 25) ஆவார். அவர் நேற்று காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் கிபுட்ஸ் ரிம் எல்லையோர நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது நண்பருடன் வந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் அர்ஹம்னியை பைக்கில் கடத்தி சென்றனர். தான் பைக்கில் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்படும்போது அர்ஹம்னி என்னை கொன்றுவிடாதீர்கள் என்று அழுதபடி செல்லும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
8 Oct 2023 7:33 AM GMT
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை 300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹமாஸ் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இதில், இளம் பெண் கொல்லப்பட்டு அவரது உடல் அரை நிர்வாணமாக காரில் கொண்டு செல்லப்படும் காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு அரை நிர்வாணமாக காரில் கொண்டு செல்லப்பட்ட இளம்பெண் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷனி லொக் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது. காசா எல்லையோர நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷனி இஸ்ரேல் சென்றிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
8 Oct 2023 6:42 AM GMT
காசா முனையில் உள்ள ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீடு தகர்ப்பு – இஸ்ரேல் பாதுகாப்புப்படை தகவல்
காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்துள்ளது. இந்த வீடு ஹமாஸ் அமைப்பின் ஆயுத கட்டமைப்பாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
8 Oct 2023 6:27 AM GMT
இஸ்ரேல் மீது லெபனானில் இருந்தும் ராக்கெட் தாக்குதல் – அதிகரிக்கும் போர் பதற்றம்
இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் மீது காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு நேற்று முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபனானில் இருந்து இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனானில் எல்லையில் உள்ள இஸ்ரேலின் மவுண்ட் டொவ் பகுதியில் இந்த ராக்கெட் மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் – லெபனான் எல்லையிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
8 Oct 2023 5:41 AM GMT
10 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – டெரொட் போலீஸ் நிலையம் மீட்பு
இஸ்ரேலின் தெற்கு நகரமான டெரோட்டில் உள்ள போலீஸ் நிலையத்தை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நேற்று கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் போலீஸ் நிலையத்தின் ஒரு பகுதியை புல்டோசர் கொண்டு உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இன்று காலை வரை நடந்த மோதலில் 10 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டு டெரொட் போலீஸ் நிலையம் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
-
8 Oct 2023 5:10 AM GMT
காசாவுக்கு வழங்கப்பட்ட குடிநீர், எரிபொருள் இணைப்பை துண்டித்த இஸ்ரேல்
காசாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நேற்று இரவு முழுவதும் காசா இருளில் மூழ்கியது.
-
8 Oct 2023 4:55 AM GMT
காசாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்; பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
காசாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த மோசமான நகரத்தில் இருந்து (காசா முனை) ஹமாஸ் நிலைநிறுத்தப்பட்டு, மறைந்திருந்து செயல்பட்டு வருகிறது. அந்த பகுதிகளை நாங்கள் கட்டிட சிதைவுகளாக மாற்றப்போகிறோம். காசாவில் வாழும் மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள், அனைத்து பகுதியிலும் நாங்கள் முழு பலத்துடன் செயல்பட உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.