கொச்சி,
கேரள மாநிலம், கொச்சியில் கடற்படை தலைமையகம் உள்ளது. இங்குள்ள ஐ.என்.எஸ். கருடா ஓடுபாதையில் கடற்படை ஹெலிகாப்டர் இன்று பிற்பகல் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ வீரர்களில் ஒருவர் பலியானார். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவர் கடற்படை தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடற்படையை சேர்ந்த சேதக் ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கடற்படை அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஏழு பேர் அமரக்கூடிய ஹெலிகாப்டரில் சம்பவத்தின்போது இரண்டு பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது