India National Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்று அதன் கடைசி வாரத்திற்கு வந்துள்ளது. வரும் நவ. 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், வரும் நவ. 12ஆம் தேதியோடு லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. இது கடைசி வாரம் என்பதால் அரையிறுதியில் தங்களின் இடத்தை உறுதிசெய்ய தற்போது பல அணிகள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன.
வலுவான இந்தியா
இந்தியா – தென்னாப்பிரிக்கா (IND vs SA)இன்று ஒருபக்கம் மோதி வந்தாலும், இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன. இன்றைய போட்டி யாருக்கு முதலிடம் என்பதை உறுதி செய்வதாக அமையும் எனலாம். ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்தில் அசத்தலாக அமைந்திருக்கிறது. அந்த அணிக்கு ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு எதிராகதான் இருக்கிறது என்பதால் சற்று நிதானமாக இருக்கும் எனலாம். அந்த நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கடுமையாக போட்டிப்போடும்.
இவை ஒருபுறம் இருக்க இந்திய அணியின் நாக்-அவுட் பலவீனம் இந்த முறை மறையுமா என்ற கேள்வி உள்ளது. 7 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது மட்டுமின்றி அனைத்து பிரிவுகளும் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது. டாப் ஆர்டரில் ரோஹித் – கில் இணை அதிரடியை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறது. விராட் கோலி – ஷ்ரேயாஸ் ஐயர் – கேஎல் ராகுல் என மிடில் ஆர்டர் பல நெருக்கடி தருணங்கில் இந்தியாவை காப்பற்றி உள்ளது. இன்றைய போட்டியிலும் இதனை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
பிளேயிங் லெவனில் மாற்றமில்லை
ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேற சூர்யகுமார் உள்ளே வந்து, கடைசி கட்ட ஓவர்களில் அவர் நம்பிக்கை அளிக்கக் கூடியவராக உள்ளார். ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு வலுசேர்க்கிறார். குல்தீப் யாதவ் இந்திய அணியின் ப்ரீமியம் ஸ்பின்னராக இருக்க தற்போது ஷமி – பும்ரா – சிராஜ் வேகக் கூட்டணி எதிரணியை மிரட்டி வருகிறது. சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே அஸ்வின் சேர்க்கப்பட்டார். அடுத்த மூன்று போட்டிகளில் ஷர்துலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.
இதெல்லாம் இருக்க இந்திய அணியின் (Team India) பிளேயிங் லெவனில் மாற்றம் வருமா என கேள்விகள் இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதிலும் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவில்லை. தென்னாப்பிரிக்கா மட்டும் கூடுதல் சுழற்பந்துவீச்சாளருக்காக கோட்ஸிக்கு பதில் ஷம்ஸிக்கு வாய்ப்பளித்துள்ளது.
3ஆவது ஸ்பின்னர்
இதன்மூலம், இந்திய அணியில் அஸ்வினுக்கு இனி வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. சுழற்பந்துவீச்சில் குல்தீப் – ஜடேஜா ஜோடியே பெரும் பயனளிக்கும் வகையில் இருப்பதால் அஸ்வினை (Ravichandran Ashwin) கூடுதலாக கொண்டுவந்தால் அது வேகப்பந்து கூட்டணியை உடைக்க நேரிடும். ஏனென்றால் இந்திய அணிக்கு வேறு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. நெதர்லாந்து போட்டியில் மட்டும் சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என கூறப்படும் நிலையில், அதில் நிச்சயம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்தாலும் பிரசித் கிருஷ்ணாவை கொண்டு வருவார்களே ஒழிய அஸ்வினை (3ஆவது சுழற்பந்துவீச்சாளரை) கொண்டுவரும் வாய்ப்பு 1 சதவீதம்தான் வாய்ப்பு.
மேலும், அரையிறுதிப்போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் மற்றும் மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெறுகின்றன. இதிலும் 3ஆவது சுழற்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு இருக்காது. இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றாலும் அகமதாபாத்திலும் ஆவது சுழற்பந்துவீச்சாளருக்கான தேவை இருக்காது.
எனவே, அஸ்வின் இனிவரும் போட்டிகளில் விளையாட வாய்ப்பே இல்லை எனலாம். அதாவது இன்றைய பிளேயிங் லெவன்தான் அரையிறுதிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனாக இருக்கும் என தெரிகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு (IND vs SA Score Update) எதிரான இன்றைய போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது. இதில் 37 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 68 ரன்களுடன் களத்தில் உள்ளார்.