இசையமைப்பாளர் தினாவே வழிவிடு : இளையராஜா வேண்டுகோள்

இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா உள்ளார். விரைவில் இந்த சங்கத்திற்கு தேர்தல் வரவுள்ளது. இதில் மூன்றாவது முறையாக தினா போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தினாவிற்கு இளையராஜா பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

அதில், ‛‛இந்த சங்கத்தை ஆரம்பித்தது எம்பி சீனிவாசன். முதன்முறையாக திரைத்துறையில் ஆரம்பித்த சங்கம் இது. இதனை இந்தியா அளவில் ஆரம்பித்தார். இந்த சங்கத்தில் இரண்டு முறை ஒருவர் தலைவராக இருக்கலாம் என்ற வரைமுறை உள்ளது. நீ ஏற்கனவே இருமுறை தலைவராக இருந்துள்ளாய். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா என பலரும் கூறுகிறார்கள்.

அதோடு சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சொல்கிறார்கள். நான் அதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் அவர்கள் வைக்க கூடிய வேண்டுகோளை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என எனக்கு தோன்றுகிறது. அதனால் இந்த கோரிக்கையை வைக்கிறேன். நீ நல்லது செய்வது வேறு விஷயம். ஆனால் இரண்டு முறை நீ தலைவராக இருந்து சங்கத்திற்கு நல்லது செய்துவிட்டாய் என்ற மன நிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்'' என நான் நினைக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினா விளக்கம்
இதுபற்றி தினாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். விரைவில் தேர்தல் நடக்கும். 1960களில் எம்பி சீனிவாசன் போட்ட உத்தரவு என்று அண்ணன் இளையராஜா சொல்கிறார். சங்க விதிமுறைகள் காலத்திற்கு ஏற்றபடி அவ்வப்போது மாறும். நாங்களும் சங்க விதிமுறைகளை மாற்றி உள்ளோம். அதன்படி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். இளையராஜாவிடம் சிலர் தவறாக கூறி உள்ளனர். நான் அவரிடம் நேரடியாக சென்று பேசி இதுபற்றி புரிய வைக்க உள்ளேன்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.