புதுடெல்லி: பாகிஸ்தானுடன் 1971-ல் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டுதோறும் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ராணுவ மாளிகையில் நேற்று நடைபெற்ற ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.
இந்நிலையில் வெற்றி தினத்தைமுன்னிட்டு தனது எக்ஸ் தளத் தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘1971-ல் நடைபெற்ற போரின்போது நமது பாதுகாப்பு படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இணையற்ற துணிச்சலை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு விஜய் திவாஸ் (வெற்றி தினம்) தினத்தில் தலை வணங்குகிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், ‘‘1971-ல் இந்தியாவுக்கு பணிவுடன் சேவை செய்து, தீர்க்கமான வெற்றியை உறுதி செய்த துணிச்சலான மாவீரர்களுக்குஇதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறோம். நமது இந்திய வீரர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பு தேசத்துக்கு மகத்தான பெருமையாக உள்ளது. இந்திய வீரர்களின் தியாகம் என்றென்றும் மக்களின் இதயங் களிலும் நமது தேசத்தின் வரலாற்றிலும் பொறிக்கப்படும்’’ என பதிவிட்டுள்ளார்.