கர்நாடகா: பள்ளி செப்டிக் டேங்க்கைச் சுத்தம் செய்த மாணவர்கள்; எழுந்த கண்டனம்… பள்ளி முதல்வர் கைது!

கர்நாடக மாநிலம், கோலார் பகுதியிலுள்ள குடியிருப்புப் பள்ளியின் செப்டிக் டேங்க்கை, அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்த விவகாரத்தில், பள்ளியின் முதல்வர், ஆசிரியர் என இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

முன்னதாக, மொரார்ஜி தேசாய் குடியிருப்புப் பள்ளியில் படிக்கும் ஐந்து அல்லது ஆறு மாணவர்கள் செப்டிக் டேங்க்கில் இறங்கி வெறும் கைகளால் சுத்தம் செய்யும் புகைப்படங்கள், நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கைது

இது குறித்துப் பேசிய கோலார் காவல் கண்காணிப்பாளர் எம்.நாராயணா, “பள்ளிக்கு நிரந்தர வார்டன் இல்லை. வார்டன் இன்சார்ஜ் முனியப்பா உட்பட 3 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்படும். பள்ளி கழிவறையைச் சுத்தம் செய்யும் பணி தனியார் ஏஜென்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்றும், இந்தப் பள்ளியின் மற்ற கிளைகளிலும் இது போன்று நடந்திருக்கிறதா என்றும் விசாரிக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், இந்தச் சம்பவத்தைக் கண்டித்த பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகவுடா ஆர் பாட்டீல், “கோலாரில் நடந்த இந்தச் சம்பவம் மொத்த சமூகத்தையே உலுக்கியிருக்கிறது. ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு நல்ல அறிவைப் புகட்டுவதற்குப் பதிலாக, இது போன்ற ஆபத்தான வேலையை அவர்களுக்கு ஒதுக்கி, அவர்களின் உயிரைப் பணயம் வைப்பது மனிதாபிமானமற்றது. அதோடு, கண்டிக்கத்தக்கதும்கூட.

தூய்மைப் பணி

மனிதக்கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் வேலையில் பணியமர்த்தத் தடை மற்றும் தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு சட்டம், 2013-ன்படி இது குற்றம். இதுமட்டுமல்லாமல், இது போன்ற ஆபத்தான வேலைகளைச் சிறார்களைக் கொண்டுசெய்வதும் சட்டப்படி குற்றமாகும். எனவே குற்றவாளிகள்மீது உடனடியாக வழக்கு பதிவுசெய்து, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.