`பாபாசாகேபின் காதல் கடிதம்' நூலும் `வேட்டுவம்' படமும் – இளையராஜா – பா.இரஞ்சித் சந்திப்பின் பின்னணி!

இளையராஜாவின் தீவிரமான ரசிகரான இயக்குநர் பா.இரஞ்சித் இன்று காலை ராஜாவைச் சந்தித்திருக்கிறார். தற்போது ஜி.வி.பிரகாஷின் இசையில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படத்தை இயக்கி முடித்திருக்கும் இரஞ்சித், இன்று இசைஞானியைச் சந்தித்து அவருடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறார். இந்தத் திடீர் சந்திப்பின் பின்னணி குறித்து விசாரித்தோம்.

இளையராஜா – பா.இரஞ்சித் சந்திப்பு

சினிமாவில் இயக்குநராக வருவதற்கு முன்பிருந்தே இளையராஜாவின் பெரும் ரசிகராக இருந்தவர் பா.இரஞ்சித். இசைஞானியைப் பற்றி இரஞ்சித் குறிப்பிடும் போதெல்லாம், “தமிழ்ச் சமூகத்தில் பன்னெடுங்காலமாக இருந்த இசை மரபை மாற்றியமைத்தவர் இளையராஜா. அவருடைய இசையே மாற்று மதிப்பை, சந்தையைக் கொண்டு வந்தது. தமிழ்ச் சமூகத்திற்கு இந்த விலைமதிப்பற்ற விஷயத்தைச் செய்தவர் அவர். அவர் இல்லையென்றால் நான் இங்கே வந்திருக்க முடியாது. எனக்கு வழிகாட்டிய, எம் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமாப் பாடல்களாய் இல்லாமல் தன்னம்பிக்கைப் பாடல்களாக இருந்திருக்கின்றன” என்று ராஜாவுக்கு எப்போதும் புகழாரம் சூட்டுவார்.

இந்நிலையில் இன்று இளையராஜாவைச் சந்தித்திருக்கிறார் பா.இரஞ்சித். இளையராஜாவை அவர் நேரில் சந்தித்தது இதுதான் முதல் முறை என்பதால், இசைஞானிக்கு நினைவுப் பரிசுகளும் கொண்டு சென்றார். ‘பாபாசாகேபின் காதல் கடிதம்’ என்ற புத்தகத்தையும் நீலம் பதிப்பகத்தின் வெளியீடு ஒன்றையும் ராஜாவுக்கு வழங்கினார். பின்னர், இருவரும் நீண்ட நேரம் உரையாடினார்கள். அவர்களது உரையாடல் அரைமணி நேரம் நீடித்தது என்கிறார்கள்.

ராஜாவின் அலுவலகத்தில் பா.இரஞ்சித்

இரஞ்சித் தற்போது இயக்கியிருக்கும் ‘தங்கலான்’ படம் அடுத்தாண்டு ஜனவரி 26ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ‘வேட்டுவம்’ என்ற படத்தை இயக்குகிறார் இரஞ்சித். சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸில் நடந்த 75வது கான் (Cannes) திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ரஞ்சித். இந்தப் படம் மதுரை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை என்ற பேச்சு இருக்கிறது.

பாலிவுட்டைச் சேர்ந்த அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, அதிதி ஆனந்த், அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளதாக அப்போது அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்காகத்தான் இளைராஜாவை கமிட் செய்ய இரஞ்சித் அவரைச் சந்தித்திருக்கிறார் என்ற பேச்சும் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.