ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த 'நேர்'

மலையாள திரையுலகில் இந்த வருட துவக்கத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து படங்கள் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தின. இந்த நிலையில் இந்த வருட இறுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால்-இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான 'நேர்' திரைப்படமும் தற்போது 50 கோடி கிளப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. ஏழு நாட்களில் உலக அளவில் 50 கோடி வசூலித்துள்ளது இந்தப்படம். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மோகன்லால் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் மலையாள திரையுலகில் திரிஷ்யம் படம் மூலமாக முதன்முதலாக 50 கோடி வசூல் கிளப்பை உருவாக்கியதே மோகன்லாலும் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் தான். முழுக்க முழுக்க நீதிமன்ற வழக்காடுதலை மையப்படுத்தி, அதே சமயம் இரண்டு மணி நேரம் விறுவிறுப்பான கதை அம்சத்துடன் உருவாகியுள்ள 'நேர்' திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பை பெற துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மோகன்லாலும் பிரியாமணியும் எதிரெதிராக வாதாடும் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.