மகளிர் கிரிக்கெட்: 2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி..!

மும்பை,

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நவிமும்பையில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து அவுட்டாகினர். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன், ரிச்சா கோஷ் 23 ரன், வஸ்த்ரகர் 9 ரன், அமன்ஜோத் கவுர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி 26 ரன்னும், பெத் மூனி 20 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய தஹிலா 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிறப்பாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமால் இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.