லண்டன்,
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 22 ஆண்டுகளில் இந்திய ராணுவ மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்ல திட்டமிட்ட நிலையில், நெறிமுறை காரணங்களுக்காக இந்திய தரப்பால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் இங்கிலாந்து பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 8-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இந்த பயணத்தின்போது இங்கிலாந்து ராணுவ மந்திரி கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லண்டனில் பிரிட்டிஷ் ராணுவத்தின் 7-ம் எண் நிறுவன கோல்ட்ஸ்ட்ரீம் காவலர்கள் மற்றும் அயர்லாந்து காவலர்களின் இசைக்குழுவினர் இணைந்து ராஜ்நாத் சிங்கிற்கு சிறப்பு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். அவரை கவுரவிக்கும் வகையில், இந்தியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.