நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பாராளுமன்றத்தில் நேற்று (24) மற்றும் நேற்று முன்தினம் (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நேற்று (24) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் முடிவடைந்ததும் பி.ப 5.00 மணிக்கு எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல அவர்களினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டது. இதற்கு அமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்கும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. இதற்கமை இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர், குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திம வீரக்கொடி அவர்களினால் சட்டமூலத்தின் 36வது பிரிவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தத்துக்கு வாக்கெடுப்புக் கோரப்பட்டது. இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த திருத்தத்துக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டு 41 மேலதிக வாக்குகளால் இந்தத் திருத்தம் தோற்கடிக்கப்பட்டது.
இதனையடுத்து நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.