கிராமி விருது வென்ற 'ஷக்தி' குழுவுக்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து

இசைத்துறைக்காக வழங்கப்படும் விருதுகளில் கிராமி விருதுகள் உலக அளவில் உள்ள இசைக்கலைஞர்களாலும் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் 'சிறந்த குளோபல் இசை ஆல்பம்' விருதை இந்திய இசைக்குழுவான ஷக்தி வெளியிட்ட 'திஸ் மொமென்ட்' என்ற ஆல்பத்திற்குக் கிடைத்தது.

அந்த ஆல்பத்திற்கு இசை அமைத்த குழுவிற்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தியாவிற்கு கிராமி விருதுகள் மழையாய் பொழிந்துள்ளது. கிராமி வின்னர்ஸ், மூன்றாவது முறை பெறும் உஸ்தாத் ஜாகிர் உசேன், முதல் முறை விருது பெறும் சங்கர் மகாதேவன் மற்றும் செல்வகணேஷ் ஆகியோருக்கு வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாகிர் உசேன் பிரபல தபேலா இசைக் கலைஞர் என்பது இசை ரசிகர்கள் அறிந்த ஒன்று. ஷங்கர் மகாதேவன் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் பாடல்களைப் பாடியவர். சென்னையைச் சேர்ந்த செல்வகணேஷ், 2008ல் வெளிவந்த 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாமனர். தமிழில் மேலும் சில படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் இசையமைத்துள்ளார். பிரபல கடம் இசைக் கலைஞர் விக்கு விநாயக்ராமின் மகன் இவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.