‘கர்நாடகாவில் பாஜகவை போல காங். ஆட்சியிலும் 40% கமிஷன்’ – ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சியின்போது அரசின் திட்ட பணிகளில் 40 சதவீத கமிஷன் வாங்கப்பட்டதைப் போலவே இப்போதைய‌ காங்கிரஸ் ஆட்சியிலும் 40 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள் என அம்மாநில ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின் தலைவர் கெம்பண்ணா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையே முன்வைத்து காங்கிரஸார் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். இதனால் தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு தோல்வி அடைந்தது.

இந்நிலையில், கர்நாடக ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின் தலைவர் கெம்பெண்ணா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியது: “முந்தைய பாஜக ஆட்சியில் அரசின் திட்டங்களை மேற்கொள்ள பாஜக‌ எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் வரை கமிஷன் வசூலித்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த முறை மாறிவிடும் என நினைத்தோம். இந்த ஆட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கமிஷன் கேட்பதில்லை. ஆனால் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 40 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள். கமிஷன் தராவிட்டால் பணத்தை தராமல் அலைக்கழிக்கின்றனர்.

இத்தகைய அதிகாரிகளால் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு மாநகராட்சி, பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனத் துறை ஆகியவற்றில் ஊழல் மலிந்துள்ளது. எனவே முதல்வர் சித்தராமையா ஊழல் அதிகாரிகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கெம்பண்ணா தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு ஹசன் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ, ”முந்தைய பாஜக ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் வாங்கினர். இப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் அதைவிட அதிகமாக கமிஷன் வாங்குகிறார்கள். இதுபற்றி நான் நேரடியாக முதல்வர் சித்தராமையாவிடம் கூறினேன். ஊழலின் காரணமாக ஹச‌ன் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது என எடுத்துரைத்தேன்” என குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.