பா.ஜ.க-வின் இரண்டு நாள்கள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதில் பா.ஜ.க-வின் 11,000 நிர்வாகிகள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரதமர் மோடி சுயசார்பு இந்தியாவை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசியலில் இந்தியா கூட்டணியின் நோக்கம் என்ன?

சோனியா காந்தியின் நோக்கம் ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதும், சரத் பவாரின் நோக்கம் அவர் மகளை முதல்வராக்குவதும், மம்தா பானர்ஜியின் நோக்கம் அண்ணன் மகனை முதல்வராக்குவதும், மு.க.ஸ்டாலினின் நோக்கம் மகனை முதல்வராக்குவதும், லாலு பிரசாத் யாதவ் அவரின் மகனை முதல்வராக்குவதையும் தான் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் குடும்பத்திற்காக அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்கள், ஏழைகளின் நலனைப் பற்றி என்றாவது நினைப்பார்களா… நாட்டின் ஜனநாயகத்தை ஊழல், தேசத்துரோகம், சாதிவெறி ஆகியவற்றால் மூடிவைத்திருக்கின்றனர். மக்களின் கருத்துச் சுதந்திரம் வெளிவராத வகையில் ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்குவதில் ஈடுபடுகின்றனர். பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் ஊழலை ஒழித்து நாட்டை வளர்ச்சியடையச் செய்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தங்கள் வாக்கு வங்கியாகப் பயன்படுத்த முயன்றுவருக்கிறது. ஆனால் பா.ஜ.க அரசால்தான் முதன்முறையாக, இந்த சமூகங்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில், திருப்திபடுத்தும் அரசியலால் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது காங்கிரஸ். பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாதம், நக்சலிசம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அரசு 3.0-வில் நாடு பயங்கரவாதம், நக்சலிசமிலிருந்து முழுமையாக விடுபடும். நாட்டின் ஜனநாயக உணர்வை அழித்துவிட்டது காங்கிரஸ். கடந்த 10 ஆண்டுகளில், மோடியின் தலைமையில் இந்தியா ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.