மோடியுடன் மதிய உணவு; 2 வாரங்களில் பாஜக-வில் இணைந்த பகுஜன் சமாஜ் எம்.பி – மாயாவதி ரியாக்சன் என்ன?!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் கூட்டணி மாறுவதும், எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் கட்சி மாறுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் பா.ஜ.க-வுக்கும் தாவி வருகின்றனர். நேற்றுகூட, காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்நாட்டு எம்.எல்.ஏ விஜயதரணி, பா.ஜ.க-வில் இணைந்தார்.

ரித்தேஷ் பாண்டே

இந்த நிலையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உத்தரப்பிரதேச மக்களவை எம்.பி ரித்தேஷ் பாண்டே, இன்று பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். இத்தனைக்கும், பிரதமர் மோடி பிப்ரவரி 9-ம் தேதியன்று, 7 எதிர்க்கட்சி எம்.பி-க்களை நாடாளுமன்ற கேன்டீனில் மதிய உணவுக்கு அழைத்திருந்தார். அதில், ரித்தேஷ் பாண்டேவும் ஒருவர்.

அப்போது, மோடி மதிய உணவுக்கு அழைத்ததற்கு நன்றி தெரிவித்து, மோடியுடன் இருக்கும் புகைப்படங்களைக் கூட X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு அப்போது தெரிந்திருக்காது, அந்த நிகழ்வுக்கு அடுத்த இரண்டே வாரங்களில் பா.ஜ.க-வில் இணைவார் என்று.

கட்சியிலிருந்து விலகியது தொடர்பாக ரித்தேஷ் பாண்டே தனது X சமூக வலைதளப் பக்கத்தில் இன்று பதிவிட்டிருக்கும் தனது ராஜினாமா கடிதத்தில், “பகுஜன் சமாஜ் மூலம் பொது வாழ்க்கையில் நுழைந்த தருணத்திலிருந்து உங்களின் (மாயாவதி) வழிகாட்டுதலைப் பெற்றேன். ஆனால், நீண்ட நாள்களாக என்னைக் கூட்டங்களுக்கு அழைக்கவில்லை. தலைமைத்துவ விவாதங்களில் நானும் பங்கேற்கவில்லை. உங்களையும், மூத்த தலைவர்களையும் சந்திக்கப் பலமுறை முயற்சித்தும் அது நடக்கவில்லை.

இப்போது, எனது சேவையும், இருப்பும் கட்சிக்கு இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். அதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. அதேசமயம், கட்சியுடனான உறவைத் துண்டிக்கும் இந்த முடிவு உணர்ச்சி ரீதியாக மிகவும் கடினமானது” எனக் குறிப்பிட்டு தனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு மாயவாதியிடம் தெரிவித்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய முன்னாள் முதல்வர் மாயாவதி, “பகுஜன் சமாஜ் கட்சியானது, டாக்டர் அம்பேத்கரின் நோக்கத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட இயக்கம். அதனால்தான் கட்சியின் கொள்கை, செயல்பாடுகள் போன்ற விஷயங்களில் நாட்டின் முதலாளித்துவ கட்சிகளிலிருந்து வேறுபட்டது பகுஜன் சமாஜ். தேர்தல்களில் இதனை மனதில் வைத்துதான் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

மாயாவதி – பகுஜன் சமாஜ்

பின்னர், தொகுதி மக்களைக் கவனித்தோமா, சம்பந்தப்பட்ட துறையில் முழு நேரத்தையும் ஒதுக்கினோமா, கட்சி மற்றும் இயக்கத்தின் நலன் கருதி அவ்வப்போது வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றினோமா என்பதைப் பகுஜன் சமாஜ் எம்.பி-க்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரும்பாலான லோக்சபா எம்.பி.க்கள் தங்கள் நலன்களுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து நெகட்டிவ் செய்திகளில் இருக்கும் போது அத்தகையவர்களுக்கு டிக்கெட் கொடுக்க முடியுமா… கட்சி நலன் மிக முக்கியம்” என்று தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.