அவதூறு வழக்கில் ஆஜராகாத ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம்: லக்னோ நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகததால் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு லக்னோவில் உள்ள நீதிமன்றம் ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 17-ல் பாரத் ஜோடோ யாத்திரையின்போது மகாராஷ்டிராவில் அகோலா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சாவர்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியதாக புகார் எழுந்தது.

சாவர்க்கரை ராகுல் காந்தி வேண்மென்றே திட்டமிட்டு அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாக கூறி வழக்கறிஞர் நிருபேந்திரா பாண்டே என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு 2024 டிசம்பரில், கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அலோக் வர்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த அவதூறு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2025-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பிட்ட தேதியில் ராகுல் ஆஜராகாத நிலையில் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த அபராதம் புகார்தாரரின் வழக்கறிஞருக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவதூறு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதே விவகாரத்தில் மற்றொரு அவதூறு வழக்கு புனே நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. ஆனால், மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும், உயர் பாதுகாப்பில் இருப்பதாலும் இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து ராகுல் காந்திக்கு நிரந்தர விலக்களிக்க கடந்த பிப்ரவரியில் புனே நீதிமன்றம் அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.