பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது: கவுரவத் தலைவர் ஜி.கே.மணி வேதனை

பாமக நிறுவனர் ராமதாஸ் 2-வது நாளாக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்தார். பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி இருப்பதாக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அன்புமணி தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தைலாபுரத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணியும், கட்சி நிர்வாகிகள் 80 சதவீதம் பேரும் புறக்கணித்தனர்.

இரண்டாவது நாளாக தைலாபுரத்தில் நேற்று மகளிரணி, மாணவரணி, இளைஞரணி மாநில நிர்வாகிகளை வரவழைத்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மொத்தமுள்ள 21 பேரில் 17 பேர் பங்கேற்றதாக தைலாபுரம் தோட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட அளவிலான நிர்வாகிகளையும் அழைத்துவிட்டு, மீண்டும் பின்னடைவை சந்திக்க விருப்பாமல், முன்னெச்சரிக்கையாக மாநில நிர்வாகிகளுக்கு மட்டும் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், இந்தக் கூட்டத்தையும் அன்புமணி, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். எனினும், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக, வன்னியர் சங்கத்தின் வலிமையை மாமல்லபுரம் மாநாடு நிரூபித்துக் காட்டியுள்ளது. அரசியல் கட்சிகளில் உட்கட்சி சலசலப்பு, நெருக்கடி வருவது இயல்புதான். அப்படித்தான் பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதை நான் மறைக்க விரும்பவில்லை. பாமக குடும்ப பாசத்துடன் இருக்கும் கட்சியாகும். கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, விரைவாக சுமூகத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

ராமதாஸ், அன்புமணியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். விரைவில் சுமூகமான தீர்வு ஏற்பட வேண்டும். பாமக இன்னும் வலிமை பெற்று, தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளேன். உட்கட்சிப் பிரச்சினையை பொதுவெளியில் பேசக்கூடாது.

ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையேயான கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என்று கூறுவது, என்னை கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு சமம். யாருக்கும் கெடுதல் நினைக்காதவன் நான். பாமகவில் 45 ஆண்டுகளாக இருக்கிறேன். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் எனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் விட்டுவிட்டு, பாமகவில் ஏன் இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். நான் எப்போதும் உண்மையாகவும், மனசாட்சியுடனும் செயல்படுவேன்.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். தேர்தல் நெருங்குவதற்கு முன்பே ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஆலோசித்து, நல்ல கூட்டணி அமைப்பார்கள். பாமக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்ற பழைய நிலை நிச்சயம் உருவாகும். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.