கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் அவதி

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் தடைபட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை 6.30 மணியளவில் கட்டுமானப் பணியின்போது மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால் பொது மருத்துவ சிகிச்சைத் துறை கட்டிடத்தில் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இதனால், அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 70-க்கும் மேற்பட்டோர் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து, மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி வாணி தலைமையிலான குழுவினர் நோயாளிகளை அங்கிருந்து மற்றொரு வார்டுக்கு மாற்றினர். இதுகுறித்து லியோ டேவிட் கூறும்போது, “ஜெனரேட்டர் மற்றும் மாற்று மின் வழித்தட வயர்களும் சேதமானதால் மின்சேவை முற்றிலுமாக தடைபட்டது.

இதையடுத்து நோயாளிகள் வேறு வேறு வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், அனைவரும் நலமுடன் உள்ளனர். ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளோ, தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகளோ அங்கு இல்லை. சில மணி நேரத்தில் மீண்டும் மின் விநியோகம் சீரானது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.