புதுடெல்லி: 2025-26 ஆம் ஆண்டுக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “2025-26 ஆம் ஆண்டுக்கான காரீஃப் பருவத்திற்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 3% உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுவான மற்றும் ஏ தர ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்துள்ளது. பொதுவான ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369 ஆகவும், ஏ தர ரகங்களுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,389 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பருப்பு வகைகளில், துவரம் பருப்பின் ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.450 உயர்த்தப்பட்டு, ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு குவிண்டால் உளுந்தின் விலை ரூ.7,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசிப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.86 அதிகரிக்கப்பட்டு, ரூ.8768 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டுக்கான காரீஃப் பயிர்களுக்கான ஆதரவு விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, 2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், அகில இந்திய சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான அறிவிப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.