புதுடெல்லி: இந்தியாவில் இன்று (ஜூன் 2, 2025) காலை 8 மணி நிலவரப்படி, 3,961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 3,961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் 203 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நேற்று டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா இறப்புகள் 32 ஆக அதிகரித்துள்ளன.
தற்போது கேரளாவில் 1,435 பேரும், டெல்லியில் தற்போது 483 பேரும், மகாராஷ்டிராவில் 506 பேரும், மேற்கு வங்கத்தில் 331 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கரோனா சூழல் குறித்து பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், “எங்கள் மத்திய சுகாதாரத் துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இரண்டும் முழுமையாக விழிப்புடன் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. அந்தந்த மாநில சுகாதாரம் மற்றும் ஆயுஷ் செயலாளர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் நாங்கள் பேசியுள்ளோம்” என்று கூறினார்.