சென்னை: “பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல.ஆடிட்டர் குருமூர்த்தி அறிவார்ந்தவர். அவர் சொன்னால் நடக்கும் என்று நம்புகிறேன். அதனால் குருமூர்த்தி வந்து பேசினார். என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்ல முடியாது.
2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நினைக்கும் அணியில் நான் இருப்பேன். கூட்டணி தொடர்பாக அனைவரும் கலந்து பேசி விரைவில் முடிவு எடுப்போம். முடிந்துபோனதை பேச வேண்டாம். முகுந்தன் விவகாரம் முடிந்துபோன விஷயம். இனி நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றி பேசுவோம். கமல்ஹாசனின் கன்னட சர்ச்சை விவகாரம் குறித்து நான் பதில் கூறுவது நன்றாக இருக்காது. தீர்வு இல்லாமல் எதுவும் இல்லை.” என்றார். மேலும், அன்புமணிக்கு மீண்டும் பாமக தலைவர் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘பேசுவோம்’ என்று பதில் அளித்தார்.