ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 300 பேர் தங்களது தாயகம் திரும்ப விருப்ப மனு அளித்துள்ளனர்.
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக் கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, இலங்கை அரசு அறிவித்தது. அதன்பின்னரும், ராமேசுவரத்துக்கு இலங்கைத் தமிழர்களின் வருகை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.
தமிழகத்தில் 119 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் தனுஷ்கோடிக்கு வந்த 314-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்படாமல், மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.
இதனிடையே, கடந்த ஆண்டு இலங்கையில் புதிய அதிபராக அநுர குமார திசாநாயக்க பதிவியேற்ற பின்னர், இலங்கை பொருளாதார வளர்ச்சி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால், தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக படகுகளில் தங்களது தாயகம் செல்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மண்டபம் முகாமில் உள்ள 300 இலங்கைத் தமிழர்கள் தாயகம் செல்ல ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடமும், சென்னையில் உள்ள அகதிகள் மறுவாழ்வு ஆணையரிடமும் விருப்ப மனு அளித்துள்ளனர். அரசு விதிமுறைப்படி, இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.