பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் அன்சாரி. இவர் கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் உள்ள பவுண்டரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரசூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள ஒரு தோப்பில் அவரின் உடல் நேற்று சடலமாகக் கண்டறியப்பட்டது.

அந்த டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தோப்புக்குள் உள்ள புதரில் சுபம் அரை நிர்வாண நிலையில், முகம் சிதைந்து சடலமாகக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சூலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சுபமின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “சுபம் அன்சாரி கடந்த 8 மாதங்களாக அங்கு தங்கி பணியாற்றி வருகிறார். அவரின் ஆசனவாய் பகுதியில் ரத்தக் கறை உள்ளது. அவரின் முகம் சிதைந்துள்ளது. கடந்த 6 நாள்களாக சுபம் பணிக்கு செல்லாமல், டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி வந்துள்ளார்.

மேலும் காலி பாட்டில்களை சேகரித்து வந்ததும் தெரியவந்துள்ளது. சுபம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.