Virat Kohli, Rohit Sharma Farewell: இந்திய கிரிக்கெட்டில் தற்போது பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது எனலாம். குறிப்பாக அனுபவமிக்க வீரர்கள் ஓய்வை அறிவித்து வருவதால் இந்திய அணிக்குள் இளைஞர்கள் வாய்ப்பை பெறுகின்றனர். இதனால், ஒட்டுமொத்தமாகவே இந்திய அணி மாற்றமடைந்து வருகிறது.
ODI Farewell: ஓடிஐ அரங்கில் தொடரும் விராட், ரோஹித்
2024 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய உடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று நட்சத்திர வீரர்கள் உடனடியாக டி20இல் இருந்து ஓய்வை அறிவித்தனர். அதே நேரத்தில், டெஸ்டில் இருந்து அஸ்வின் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கடந்த மே மாதத்திலும் ஓய்வை அறிவித்தனர்.
ஏற்கெனவே சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியில் முக்கால்வாசி வீரர்கள் இளைஞர்களாகவே உள்ளனர். தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் சீனியர்கள் குறைந்துவிட்டனர், 25 வயதான சுப்மான் கில் டெஸ்ட் கேப்டன்ஸியை பெற்றிருக்கிறார். இந்த சூழலில் இந்திய ஓடிஐ அணியில் மட்டுமே சீனியர்கள் நிறைந்திருக்கின்றனர். குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச அளவில் இன்னும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை.
ODI Farewell: விராட், ரோஹித் அடுத்து எப்போது விளையாடுவார்கள்…?
அப்படியிருக்க, தற்போதுதான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது என்றாலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒருநாள் அரங்கில் இருந்து இன்னும் ஓய்வை அறிவிக்காமல் உள்ளனர். 2027 உலகக் கோப்பை தொடர் வரை இவர்கள் இருவரும் விளையாடுவார்களா அல்லது அதற்கு முன்னரே ஓய்வை அறிவித்து தங்களின் Farewell போட்டியை விளையாடுவார்களா என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது.
தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளை விளையாட அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. அதன்பின், 3 ஓடிஐ மற்றும் 3 டி20 போட்டிகளை விளையாட வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் பங்கேற்பார்களா என்பதும் சந்தேகம்தான். அதைத் தொடர்ந்து, மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு 2 டெஸ்ட் போட்டிகளை விளையாட வருகை தருகின்றனர்.
ODI Farewell: இருவருக்கும் Farewell
இதன்பின்னர் தான் இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் சுற்றுப்பயணமே இருக்கிறது. அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.
இந்த தொடரில்தான் விராட் கோலியும், ரோஹித் சர்மா பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்னும் 4 மாதங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விராட் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு Farewell போட்டியை நடத்தி கௌரவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை இதுதான் ரோஹித், விராட் கோலிக்கு கடைசி போட்டியா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்கள் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியும் ஆஸ்திரேலியாவில்தான் நடைபெற்றது.
ODI Farewell: ஏன் ஆஸ்திரேலியாவில் Farewell?
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க் கூறுகையில், “விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்த நாட்டில் (ஆஸ்திரேலியா) விளையாடுவதைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாகக் கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும், அப்படி இருக்காது என்றே வைத்துக்கொள்ளலாம். ஆனால் அப்படியானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழியனுப்புதல் நிகழ்வை நிச்சயம் நடத்த வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்த அற்புதமான பங்களிப்புக்காக இந்த வழியனுப்புதல் நிகழ்வை உறுதிசெய்ய விரும்புகிறோம்” என்றார்.
ODI Farewell: ரோஹித், விராட் விளையாடுவார்களா…
இதன்மூலம், இந்த Farewell நிகழ்வு ஆஸ்திரேலியாவில் கடைசி போட்டி என்பதால் நடத்தப்பட இருக்கிறது என்பது உறுதியாகிறது. எனவே ஆஸ்திரேலிய தொடருக்கும் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். 2027 உலகக் கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் ரோஹித் சர்மாவுக்கு வயது 40 ஆகவும், விராட் கோலிக்கு வயது 38 ஆகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.