தருமபுரி: தருமபுரியில் தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணி மேற்கொள்கிறோம்.
இதற்காக விரைவில் மாநில, மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாநாடு நடத்த உள்ளோம். தொடர்ந்து எங்கள் பயணம் தொடரும். பாஜகவில் இருந்து, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
அதேநேரத்தில், அதிமுக கூட்டணியில் இல்லை என்று நாங்கள் எங்கும் சொல்லவில்லை. திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்துக்கு நன்றி சொன்னோம். இது அரசியல் நாகரிகம்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, அதற்கு நன்றி சொல்வது அரசியல் மாண்பு, அதைத்தான் நாங்கள் செய்தோம். இதனால் கூட்டணி மாறுமா, அதே கூட்டணி தொடருமா என்பது உங்கள் கற்பனை. கூட்டணி தொடர்பான இறுதி முடிவை கட்சியின் தலைமைக் கழகம் ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.