பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூடுதலாக 125 சிசி சந்தையில் மீண்டும் டிஸ்கவர் மாடல் கொண்டு வரலாம் அல்லது வேறு ஏதேனும் புதிய பெயரில் ஒரு தொடக்க நிலை குடும்பத்திற்கு ஏற்ற பட்ஜெட் விலை 125சிசி இன்ஜின் கொண்ட மாடலை அறிமுகம் செய்யலாம் என உறுதிப்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் தொடர்பான கூட்டத்தில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா கூறுகையில், நாங்கள் கூடுதலாக ஒரு 125சிசி துவக்க நிலை சந்தைக்கான மாடலை தயாரித்து வருகின்றோம், இந்த மாடல் நடப்பு நிதியாண்டில் விரைவில் விற்பனைக்கு வெளியாகும் என குறிப்பிட்டு இருக்கின்றார். ஏற்கனவே இந்நிறுவனம் 125 சந்தையில் பல்சர் 125 என்எஸ்125, என்125 என 3 பல்சர் மாடல்கள் மற்றும் ஒரு சிஎன்ஜி மாடல் என மொத்தமாக நான்கு மாடல்களைக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் சைக்கிள் பிரிவு என்றால் 125சிசி ஒன்றாக அமைந்திருக்கின்றது. குறிப்பாக இந்த சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் சைன் 125, எஸ்பி 125 கூடுதலாக டிவிஎஸ் ரைடர் மேலும் ஹீரோ நிறுவனத்தின் சூப்பர் ஸ்ப்ளெண்டர் கிளாமர் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட எக்ஸ்ட்ரீம் 125ஆர் போன்ற மாடல்கள் அமோகமான சந்தை மதிப்பைக் கொண்டிருக்கின்ற நிலையில் பல்சர் மாடல் வழியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 125சிசி பிரிவில் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ளது.
இந்த நிலையில் போட்டியாளர்களுக்கு கடும் சவால்வினை ஏற்படுத்தும் வகையில் ஐந்தாவது மாடலும் அமைய இருக்கின்றது, ஏற்கனவே நிறுவனம் சிடி125 எக்ஸ் மற்றும் டிஸ்கவர் போன்ற மாடல்களை நீக்கி இருக்கின்றது இந்த பிரிவில் இவற்றில் ஏதேனும் ஒன்றை புதுப்பிக்கலாம் அல்லது புதிதாக ஒரு மாடலை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.