மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பது அவமதிக்கும் செயல்: மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கருத்து

மும்பை: மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பது அவர்களை அவமதிக்கும் செயல் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். குறிப்பாக, வாக்காளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது ஏன், திடீரென வாக்கு சதவீதம் அதிகரித்தது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்போதே தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள பிஹார் தேர்தலிலும் மகாராஷ்டிராவைப் போலவே முறைகேடுகள் நடைபெறும் என ராகுல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமர்சித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மீண்டும் மறுப்பு தெரிவித்திருந்தது.

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது ஏன் என்பது பற்றி ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதைவிடுத்து, மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுப்பது என்பது அவர்களை அவமதிக்கும் செயல். பிஹார் பேரவைத் தேர்தலில் ஏற்பட உள்ள தோல்விக்கு காரணம் கூற இப்போதே தயாராகி வருகிறார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியை மேலும் படுகுழியில் தள்ளிவிடும். ராகுலை சந்திக்க நேரம் கேட்டால் ஒரே நாளில் கிடைக்காது என அக்கட்சி எம்எல்ஏ-க்களே கூறுகின்றனர். இதுபற்றி அவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும். ஜனநாயக நடைமுறைகள் மற்றும் அரசியல் சாசன அமைப்புகள் குறித்து ராகுல் தொடர்ந்து சந்தேகம் எழுப்புகிறார். இதன் மூலம், நாட்டை எந்த திசையில் கொண்டு செல்கிறோம், எத்தகைய விஷத்தை பர்ப்புகிறோம் என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தோல்வி ராகுல் காந்தியையும் அவருடைய கூட்டாளிகளையும் வேதனைப்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தேர்தலில் அளித்த தீர்ப்பை ராகுல் தொடர்ந்து அவமதித்தால், மக்கள் ராகுலை மன்னிக்க மாட்டார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.