தூத்துக்குடி: திருச்செந்தூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடை தொட்டிக்குள் இறங்கிய மாற்றுத் திறனாளி தூய்மைப் பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமணி(40). மாற்றுத் திறனாளியான இவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக நேற்று காலை சுடலைமணி மற்றும் சக தூய்மைப் பணியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். பாதாள சாக்கடைக் குழாய் தொட்டிக்குள் சுடலைமணி இறங்கியுள்ளார். அப்போது அவர் தவறி உள்ளே விழுந்து கழிவுநீரில் மூழ்கியுள்ளார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுடலைமணியை மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சுடலைமணியின் மனைவி ஏற்கெனவே இறந்த நிலையில், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.