`அரசுப் பள்ளிக்கு என்ன குறைச்சல்?' – அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த மாவட்ட நீதிபதி!

‘தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால், அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும்’ என்று நம்மில் பலரும் தவறான கற்பிதத்தை மனதில் கொண்டு, கடனை வாங்கியாவது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். பக்கத்திலேயே இருக்கும் அரசுப் பள்ளிகளை பரிசீலிக்கக்கூட மறந்து, ஒதுக்குகிறோம்.

government school

ஆனால், உண்மையில் பல அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளைத் தாண்டி மிகச்சிறப்பாக கல்வி போதிக்கப்படுகிறது. பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி, மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். இதை உணர்ந்ததால் என்னவோ புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட மாவட்ட நீதிபதி ஒருவர், தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து, அசரடித்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளையைச் சேர்ந்த முருகேசன் என்பவர்தான் அந்த அற்புத நீதிபதி. இவர், செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் உள்ள முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த ஊரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2025- 2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் முருகேசன் தனது மகள் புவனேஸ்வரியை எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார். அதன் பின்னர், அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய நீதிபதி முருகேசன், “அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. நம் பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிக்கும் விதமாக நம் பள்ளியில் இன்று சேர்க்கை நடைபெற்றுள்ளது. தாய் மொழியில் கற்கும் கல்வியால் மட்டுமே எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிப்பதற்கும், இக்கட்டான நேரங்களில் சரியான முடிவை தானே எடுப்பதற்கும் உறுதுணையாக இருக்கும். அதனால், என் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளேன்.

government school

மற்றவர்களும், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்று கூறினார். ‘உங்களைப் பார்த்து உங்களை போன்று உயர் பதவிகளில் இருக்கும் பலரும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க, உங்கள் செயல் ஊக்கமாக இருக்கும். உங்கள் பிள்ளையை எங்கள் பள்ளியில் சேர்த்தற்கு நன்றி’ என்று ஆசிரியர்களும் நீதிபதியின் செயலுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஒருவர் தனது பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது, பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.