எடையைக் குறைத்து, உடலை ஃபிட்டாக வைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவருக்குமான ஆசை. ஆனால், சிலர்தான் அதைச் செயல்படுத்துவார்கள்.
சிலர், முயற்சியில் தோல்வியுற்று பயிற்சி செய்வதையே நிறுத்திவிடுவர். இதற்குக் காரணம், தொடக்கத்திலேயே அதிகப்படியான பயிற்சிகளைச் செய்வது.
உடனே ஃபிட்டாக வேண்டும் என்ற ஆசை மிகுதியில் எடுத்த எடுப்பில் எல்லா பயிற்சிகளையும் செய்வது, உடலுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.
ஒருவித சோர்வை அளித்து, பயிற்சி செய்யும் மனநிலையையே போக்கிவிடும். உடற்பயிற்சியில் எது சரி… எது தவறு எனத் தெரிந்துகொண்டால், பாதிப்பில் இருந்து தப்பலாம். ஹெல்த்தியாக ஃபிட்டாகலாம்!

சிலர், காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களைக் கழித்துவிட்டு வெறும் வயிற்றில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வார்கள். சிலர், நொறுக்குத்தீனி, முட்டை என நன்றாக உண்டுவிட்டு, காபி குடித்த பின் உடற்பயிற்சி செய்வார்கள். இரண்டுமே தவறு.
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உடலின் தசைநார்கள் பாதிக்கப்படும். விரைவில் சோர்வு ஏற்படும். காலையில் எழுந்ததும், பல் துலக்கிய பின் முந்தைய நாள் இரவே ஊறவைத்த பாதாம், வால்நட் போன்றவற்றை ஐந்தாறு சாப்பிட்டுவிட்டு, நீராகாரம் அல்லது தண்ணீர் அருந்திய பின், சிறுநீர் கழித்துவிட்டு உடற்பயிற்சிக்குச் செல்லலாம்.

ஆரம்பத்திலேயே சிலர் ஸ்போர்ட்ஸ் டிரிங்க், புரோட்டின் ஷேக் எல்லாம் எடுத்துக்கொண்டு உடற்பயிற்சிக்குச் செல்வார்கள். 10 நிமிடங்கள் டிரெட்மில்லில் நடந்துவிட்டு, மடக்மடக்கென இவற்றை அருந்துவார்கள். இது மிகவும் தவறான விஷயம்.
ஜூஸ், ஸ்போர்ட்ஸ் டிரிங்க் போன்றவை அதிக கலோரி நிறைந்தவை. இதை அதிகமாகப் பருகுவதால், உடற்பயிற்சி செய்தற்கான பலனே இல்லாமல் போய்விடும். நாவறட்சி ஏற்படும்போது சர்க்கரை சேர்க்காமல் உப்பு மட்டும் சேர்த்த எலுமிச்சை ஜூஸ் சிறிது பருகலாம்.

உடற்பயிற்சி செய்த பிறகு சாப்பிட்டால் கலோரி சேர்ந்துவிடும் எனச் சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மாலை அல்லது இரவில் உடற்பயிற்சி செய்த பின், இரவு உணவைத் தவிர்க்கிறார்கள். இது மிகவும் தவறு.
கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளைத்தான் உடனடியாகச் சாப்பிடக் கூடாது. உடற்பயிற்சிக்குப் பின் 30 – 45 நிமிடங்கள் கழித்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின்கள், மாவுச்சத்து என எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த உணவுகளை உட்கொள்ளலாம். கொய்யாப்பழம், மாதுளை போன்ற அதிக இனிப்பு இல்லாத பழங்களைச் சாப்பிடலாம்.

சிலர் ‘நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வொர்க்அவுட் செய்தால், எந்தப் பிரச்னையும் இல்லை’ என நினைத்து, பிரியாணி, அரிசி சோறு, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பாஸ்ட் ஃபுட் என வெளுத்துக்கட்டுவார்கள்.
சிலர் நேரத்துக்குச் சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள். உடலைக் கெடுக்கும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு வொர்க்அவுட் செய்தால், எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும் என நினைப்பார்கள்.
உடற்பயிற்சியின் பலன்கள் முழுமையாகக் கிடைக்க, வாழ்க்கை முறையில் மாற்ற வேண்டும். காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. மூன்று வேளைக்குப் பதில், ஆறு வேளையாக உணவைப் பிரித்து, சிறிது சிறிதாக உட்கொள்ள வேண்டும்.
கீரை, காய்கறிகள், முட்டை, எண்ணெய் அதிகம் சேர்க்காத, வீட்டிலேயே சமைத்த இறைச்சி, நட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
அரிசி உணவை அளவோடு சாப்பிட வேண்டும். இரவில் குறித்த நேரத்துக்குப் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். ஏழெட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…