இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – 3 பேர் பலி

ஜெருசலேம்,

இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் தங்கள் நாட்டிற்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது. இதனால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையை தடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இதனிடையே, அணு ஆயுத தயாரிப்பை கைவிடும்படி ஈரானிடம், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

அதேவேளை, அணு ஆயுத தயாரிப்பிற்கான முக்கிய மூலக்கூறான யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரித்தது. தற்போதைய நிலவரப்படி 15 அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவிற்கு ஈரான் யுரேனியம் செறிவூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுத தயாரிப்பின் இறுதி கட்டத்தை ஈரான் எட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்துவிட்டால் தங்கள் நாட்டின் இருப்புக்கு ஆபத்து என கருதிவரும் இஸ்ரேல் நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் உள்பட 78 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஏவுகணைகள், டிரோன்கள் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி சில டிரோன்கள் இஸ்ரேலை தாக்கின. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.