தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: முதல்வர் அறிவிப்பு

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.325.96 கோடி மதிப்பிலான 2,461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.309.48 கோடி மதிப்பிலான 4,127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.25 லட்சம் பேருக்கு ரூ.558.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2021-22 முதல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு இத்திட்டத்துக்கு ரூ.82.77 கோடி ஒதுக்கப்படும். முதல்முறையாக டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களிலும் குறுவை சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.132.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 56 ஆயிரம் விவசாயிகள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

அரசுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புலம்புகிறார். உள்கட்சி மற்றும் கூட்டணி பிரச்சினைகளை மறைக்க அறிக்கை அரசியல் செய்கிறார்.

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் 46 வகையான சேவைகளை மக்கள் பெறலாம்.

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க மசோதா நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். 40 நாட்களுக்கு மேல் ஆகியும் அவர் ஒப்புதல் தரவில்லை. இனியும் அனுமதி தராவிட்டால், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்து, ஆளுநரை பணியவைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.