மாணவியின் தற்கொலை முயற்சியை தடுத்த இன்ஸ்டாகிராம்.. என்ன நடந்தது..?

ரேபரேலி,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வருகிறார். 21 வயதான அவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் “குட்பை சாரி அம்மா அப்பா” என்று கூறி மாத்திரைகளின் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். 16-ந்தேதி இரவில் 7.42 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த பதிவு குறித்து, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு, தொழில்நுட்ப முறையில் எச்சரிக்கை அறிவிப்பு சென்றது. உடனே அந்த நிறுவனம், அந்த பதிவு குறித்து மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவலை பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்தது.

தகவல் கிடைத்ததும் போலீஸ் டிஜி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவலை கடத்தி இளம்பெண்ணின் தற்கொலை முயற்சியை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். தகவல் வந்த 8 நிமிடங்களில் மில் பகுதி போலீஸ் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டை சென்றடைந்தனர். உடனே அந்த மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார், மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் கூறுகையில், “அந்த இளம் பெண் தனது கல்வியில் கவனம் செலுத்த விரும்பினார், ஆனால் அவரது பெற்றோர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அவர் இந்தப் பதிவை வெளியிட்டார். அதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு சரியான நேரத்தில் எச்சரிக்கை கிடைத்தது, அதனால் தலையிட முடிந்தது. அவரும் அவரது குடும்பத்தினரும் தற்போது இந்த விஷயத்தை அமைதியாக தீர்க்க ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.