புதுடெல்லி,
இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், அங்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள இந்தியர்கள் பத்திரமாக ஆபரேஷன் சிந்து மூலமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் போர் பாதிக்கப்பட்ட ஈரானின் பல்வேறு பகுதிகளில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக மீட்டு சிறப்பு விமானம் மூலமாக அழைத்து வரப்படுகிறார்கள்.
அந்த வகையில் நேற்று முன்தினம் வரை 827 பேர் நாடு திரும்பினர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் 290 பேரும், நேற்று மாலை 311 பேரும், நேற்று இரவு 285 பேரும் என ஒரே நாளில் 886 பேர் விமானம் மூலம் டெல்லி திரும்பினர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்று, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி இதுவரை 1,713 பேர் தாயகம் திரும்பி உள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் வலைதளத்தில், “சிந்து நடவடிக்கையின் கீழ் இந்தியாவின் வெளியேற்ற முயற்சிகள் தொடர்கின்றன. ஜூன் 22 அன்று 23.30 மணிக்கு புதுடெல்லியில் தரையிறங்கிய சிறப்பு விமானத்தில் மஷாத்தில் இருந்து வெளியேறிய 285 இந்தியர்களை மத்திய அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா வரவேற்றார். இதன் மூலம், 1,713 இந்தியர்கள் இப்போது ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.