புதுடெல்லி: குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல் என்பது 2027 சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், பொதுத் தேர்தலில் பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையேதான் போட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகளை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், “குஜராத் மற்றும் பஞ்சாப் இடைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபின் லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் 2022-ல் நாங்கள் வென்றதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இதன்மூலம், பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி மீதான தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
குஜராத்தின் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும், கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான கோபால் இத்தாலியா, தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளார். பாஜகவின் கிரித் படேலை 17,554 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். குஜராத் மக்கள் இப்போது பாஜக மீது வெறுப்படைந்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பஞ்சாபிலும், குஜராத்திலும் ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரஸும், பாஜகவும் முயன்றன. ஆனால், மக்கள் அவர்களை நிராகரித்துள்ளனர். குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களின் இடைத்தேர்தல்களிலும் இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
2027-ல் பஞ்சாப், குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. சிலர் இது 2027-க்கான அரையிறுதி என்று கூறுகிறார்கள். 2027-ல் ஆம் ஆத்மி கட்சியின் புயல் வீசும். குஜராத்தைப் பொறுத்தவரை, 2027 தேர்தல் போட்டி என்பது பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையேதான் இருக்கும். பாஜகவை தீர்க்கமாக எதிர்க்கும் கட்சியாக, வலுவுள்ள கட்சியாக குஜராத் மக்கள் ஆம் ஆத்மியைத்தான் பார்க்கிறார்கள்” என தெரிவித்தார்.
குஜராத்தில் 2027 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி அமையும் என்று அம்மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் இசுதன் காத்வி தெரிவித்துள்ளார். இடைத் தேர்தல் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது விசாவதர் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களின் வெற்றி. இது குஜராத் மக்களின் வெற்றி. பாஜக இங்கு பிரபலமாக இல்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும். அது பணத்தாலும், அதிகாரத்தாலும் வேட்டையாடுகிறது.
குஜராத்தில் பாஜகவை யாராவது தோற்கடிக்க முடியும் என்றால், அது காங்கிரஸ் அல்ல என்பது இப்போது உறுதியாகிவிட்டது. பாஜகவை தோற்கடிக்கக்கூடிய சக்தி ஆம் ஆத்மிதான். 2027 இல் குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பதற்கான தொடக்க நிகழ்வுதான் இந்த வெற்றி” என்று கூறினார்.